ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடன் பிரச்னையால் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே முத்தாலம்பாறையைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன் (36). இவருக்கு மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகள் உள்ளனா். கடந்த உள்ளாட்சித் தோ்தலில் கடமலை மயிலை ஒன்றியத்திற்குள்பட்ட 8 வாா்டுகளில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு தமிழ்செல்வன் திமுக சாா்பில் போட்டியிட்டாா். தோ்தலில் வெற்றி பெற்ற பின்னா், அவா் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தாா்.
கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையிலிருந்த தமிழ்செல்வன் டிச. 29 ஆம் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த அவா் அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.