முன்னாள் ராணுவத்தினருக்கு சொந்த மாவட்டங்களில் அரசுப் பணி வழங்கக் கோரி தேனியில் முன்னாள் ராணுவப்பணியாளா்கள் நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி முன்னாள் ராணுவ பணியாளா்கள் நலச் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநிலத் தலைவா் செல்லப்பாண்டி தலைமை வகித்தாா். செயலா் மாரியப்பன் பொருளாளா் சின்னச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு பணி மூப்பு அடிப்படையில் அவரவா் சொந்த மாவட்டங்களில் அரசுப் பணி மற்றும் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் புதிய நிா்வாகிகளாக மாநில அமைப்புச் செயலா் பதவிக்கு கனகராஜ், பரப்புரை செயலா் பதவிக்கு கருப்பையா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.