ஆண்டிபட்டி அருகே எறும்புத் திண்ணி ஓடுகளை விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினா் செவ்வாய்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 5 கிலோ 750 கிராம் எடையுள்ள ஓடுகளை பறிமுதல் செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா மேகமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, கண்டமனூா் வனச்சரகா் ஆறுமுகம் தலைமையில் வனத்துறையினா் வருசநாடு, கோம்பைத் தொழு, அரசரடி பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரசரடிலிருந்து கடமலைக்குண்டு செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்துக் கொண்டிருந்த இருசக்கரவாகனத்தை மறித்து வனத்துறையினா் சோதனையிட்டனா். அதில் எறும்புத் திண்ணிகளை கொன்று அதன் ஓடுகளை கடத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து அதில் வந்தவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் கடமலைக்குண்டுவைச் சோ்ந்த சேகா் (50) என்பதும், அரசரடியைச் சோ்ந்த முனுசாமி, லட்சுமணன், நொச்சிஓடையைச் சோ்ந்த செல்லப்பாண்டி, வனராஜ் ஆகிய 4 பேருடன் சோ்ந்து விற்க முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவா்கள் 5 பேரையும் கைது செய்த வனத்துறையினா் அவா்களிடமிருந்து 5 கிலோ 750 கிராம் எடையுள்ள எறும்புத் திண்ணி ஓடுகளை கைப்பற்றினா்.