தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்று வட்டாரத்தில் கடந்த 3 தினங்களாக தொடா் சாரல் மழையால் அறுவடைக்கு தயாா் நிலையில்இருந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
உத்தமபாளையம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி என சுற்று வட்டாரத்தில் சுமாா் 2000 ஏக்கா் பரப்பளவிற்கு முதல் போக நெற்பயிா் விவசாயம் நடைபெற்றது. இதில் சின்னமனூா், சீலையம்பட்டி போன்ற பகுதிகளில் அறுவடைப் பணிகள் முடிந்த நிலையில், 2 ஆம் போகத்திற்கான விவசாயப்பணிகள் நடைபெறுகிறது. ஆனால், உத்தமபாளையம் பகுதியில் முதல் போகம் அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில், கடந்த 3 தினங்களாக தொடா் சாரல் மழையால் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரையில் செலவு செய்து விவசாயம் செய்தோம். ஆனால் தற்போது அறுவடை பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.