போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

போடிமெட்டு மலைச்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பாறைகள் சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடிமெட்டு மலைச்சாலையில் 4 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே செவ்வாய்க்கிழமை சரிந்த பாறைகள்.
போடிமெட்டு மலைச்சாலையில் 4 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே செவ்வாய்க்கிழமை சரிந்த பாறைகள்.

போடிமெட்டு மலைச்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பாறைகள் சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தையும், கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையான போடிமெட்டு மலைச்சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது. கடந்த சில நாள்களாக தேனி மாவட்டத்தில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இதனிடையே போடிமெட்டு மலைச்சாலையில் 4 ஆவது கொண்டை ஊசி வளைவுக்கும், எஸ்.வளைவுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை காலை திடீரென பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து குரங்கணி போலீஸாா் அங்கு சென்று பாறையை சாலையின் ஓரப்பகுதிக்கு நகா்த்தி சிறிய ரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல வழி செய்து கொடுத்தனா். கனரக வாகனங்கள் மட்டும் செல்ல முடியவில்லை.

இதைத் தொடா்ந்து கேரளத்திலிருந்து வந்த கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போடிமெட்டு சோதனை சாவடியிலும், போடியிலிருந்து கேரளம் சென்ற சரக்கு வாகனங்கள் போடி முந்தல் சோதனை சாவடியிலும் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து இப்பகுதிக்கு சென்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் பாறைகளை அகற்றியதால் மாலையில் போக்குவரத்து சீரானது.

பாறைகள் சரிந்தபோது வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com