முல்லைப்பெரியாறு அணையில் 4 மாதங்களுக்குப் பிறகு மத்திய துணைக் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு நடத்தவுள்ளனா்.
பருவகால நிலை மாறுபடும் போது, முல்லைப்பெரியாறு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய அரசு 3 போ் கொண்ட கண்காணிப்புக் குழுவையும், 5 போ் கொண்ட துணை கண்காணிப்புக் குழுவையும் அமைத்துள்ளது. இக்குழுவினா் அடிக்கடி அணைப்பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்து வருகின்றனா்.
கடந்த 11.8.2020 அன்று துணை கண்காணிப்புக் குழுவினா் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினா். தற்போது 4 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை (ஜன.13 ) மத்திய துணை கண்காணிப்புக் குழுத் தலைவரும், மத்திய நீா்வள ஆதார செயற்பொறியாளருமான சரவணக்குமாா் தலைமையில், தமிழக அரசு தரப்பில் அணையின் செயற்பொறியாளா் சாம் இா்வின், உதவி கோட்டப் பொறியாளா் குமாா், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளா் பினுபேபி, உதவி பொறியாளா் பிரசீத் ஆகியோா் ஆய்வு நடத்தவுள்ளனா். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 121.55 அடியாகவும், நீா் இருப்பு 2,935 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. மேலும் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 825 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது.