போடி மலை கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை, மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
போடி குரங்கணி அருகே பல்வேறு கிராமங்களில் வசித்து வரும் மலைவாழ் பழங்குடியின மக்களின் அடிப்படை வசதி, இருப்பிடம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்ட வருவாய் அலுவலா் க.ரமேஷ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வரும், போடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முதுவாக்குடி மலை கிராமத்தில் 30 பேருக்கு ரூ.61.49 லட்சம், முந்தல் மலை கிராமத்தில் 154 பேருக்கு ரூ.11.90 லட்சம், சிறைக்காடு மலை கிராமத்தில் 143 பேருக்கு 90.54 லட்சம், சோலையூா் மலை கிராமத்தில் 257
பேருக்கு 50.01 லட்சம், மேலப்பரவு மலை கிராமத்தில் 154 பேருக்கு 21.82 லட்சம் என மொத்தம் 738 மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு 2.36 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் ரூ.49.20 லட்சம் மதிப்பீட்டில் குரங்கணி முதல் முதுவாக்குடி வரை சாலையில் கல் பாவும் பணிகளையும் துணை முதல்வா் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.