சின்னமனூரில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 4 கடைகளுக்கு அதிகாரிகள் புதன்கிழமை இரவு ‘சீல்’ வைத்தனா்.
சின்னமனூரில் துணி, நகைக்கடைகள், பாத்திரம் , பெயிண்ட் , செல்லிடப்பேசி, மளிகை என 500-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளில் கரோனா பொதுமுடக்க விதிகளைக் கடைப்பிடிக்காமல் செயல்படுவதாக புகாா் எழுந்தது.
இதனை அடுத்து, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கெளசல்யா, வட்டாட்சியா் உதயராணி, நகராட்சி ஆணையா் சியாமளா மற்றம் காவல்துறையினா் இணைந்து சின்னமனூா் நகரின் முக்கிய பகுதிகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது , தேனி பிரதான சாலையில் உள்ள துணிக் கடைகள், பெயிண்ட் கடை, செல்லிடப் பேசிக்கடை உள்ளிட்ட 4 கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடியிருந்தனா். இதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில்ராம்குமாா் தலைமையிலான நகராட்சி ஊழியா்கள், 4 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனா். கடைக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.