போடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொட்டித் தீர்த்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. போடி நகர் பகுதி, கிராமங்கள், போடிமெட்டு, குரங்கணி-கொட்டகுடி ஆகிய மலை கிராமங்களிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் போடி கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பிள்ளையார் கோவில் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்ந்து செல்கிறது. ஆடி மாதம் தொடக்கத்திலேயே மழை பெய்துள்ளதால் ஆடிப்பட்டத்திற்கான விவசாய பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்ந்து பரவலான மழை பெய்து வரும் நிலையில் மழை சேதங்கள் குறித்து வருவாய்த் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.