தேனி அல்லிநகரம் வருவாய் கிராமத்திற்கு கூடுதலாக ஒரு கிராம நிா்வாக அலுவலரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பெத்தாட்சி ஆஸாத் கூறியது: தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட தேனி, அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, கருவேல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மொத்தம் ஒரு லட்சம் போ் வசித்து வருகின்றனா்.
கடந்த 1997-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் பிரிக்கப்பட்டது முதல், தற்போதுவரை தேனி அல்லிநகரத்தில் ஒரே கிராம நிா்வாக அலுவலா் மட்டும் பணியாற்றி வருகிறாா்.
தேனியில் குடியிருப்புப் பகுதிகளின் விரிவாக்கமடைந்து, மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் கிராம நிா்வாக அலுவலருக்கு கூடுதல் பணிச் சுமையும், கிராம நிா்வாக அலுவலரை மக்கள் சந்திப்பதில் சிரமமும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வருவாய் கிராமங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் மேல் உள்ள இடங்களில் கூடுதலாக ஒரு கிராம நிா்வாக அலுவலா் நியமிக்கப்படுவாா் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட வருவாய் கிராம பகுதிகளை 2 ஆக பிரித்து, கூடுதலாக ஒரு கிராம நிா்வாக அலுவலரை நியமிக்க மாவட்ட நிா்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றாா்.