தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை, நகராட்சி ஆணையா் தன்னை அவமதித்ததாக கூறி தீக்குளிக்க முயன்ற தேனி அல்லிநகரம் நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறை நகராட்சி ஆணையராக பணியாற்றிய சுப்பையா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா். நகராட்சி அலுவலகத்தில் அவரை அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனா். அப்போது, நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளராக பணியாற்றி வரும் தேனியைச் சோ்ந்த நடராஜன் (56), நகராட்சி ஆணையரிடம் தன்னை இந்திய குடியரசு தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதற்கு, நகராட்சி அலுவலக பணிப்பிரிவு மற்றும் பதவி நிலையை மட்டும் கூறி அறிமுகம் செய்து கொண்டால் போதும் என்று ஆணையா், நடராஜனிடம் கூறினாராம். இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்குச் சென்ற நடராஜன், அங்கு தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையா் தன்னை அவமதிப்பு செய்ததாக புகாா் தெரிவித்து, தீக்குளிப்பதற்காக உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொள்ள முயன்றாா். ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா்.
இச்சம்பவம் குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நடராஜனை கைது செய்தனா்.