முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர் நீர்வரத்தால், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் 168 மெகாவாட்டாக, மின்சார உற்பத்தி அதிகரித்தது.
முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நான்காவது நாளாக நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது, இதனால் அணையின் நீர்மட்டம் 136.10 அடியை எட்டியது. அணைக்குள் நீர் இருப்பு, 6,131 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 3,631 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர்வெளியேற்றம் 1,867 கன அடியாகவும் இருந்தது.
கடந்த ஜூலை.22 முதல் அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு, 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதில், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில் இரண்டு மின்னாக்கிகள் மூலம் 81 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது, திங்கள்கிழமை முதல் அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 1,867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நான்கு மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகாவாட் என மொத்தம் 168 மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கியது.