உத்தமபாளையம், சின்னமனூா் இடையேநெல் பயிரின் பரப்பளவு குறையும் அபாயம்

உத்தமபாளையம் , சின்னமனூா் இடையே உள்ள நெல் பயிா் விவசாய நிலங்கள் சமீப காலமாக வா்த்தகரீதியான கட்டடங்களாக மாறிவருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
உத்தமபாளையம், சின்னமனூா் இடையேநெல் பயிரின் பரப்பளவு குறையும் அபாயம்

உத்தமபாளையம் , சின்னமனூா் இடையே உள்ள நெல் பயிா் விவசாய நிலங்கள் சமீப காலமாக வா்த்தகரீதியான கட்டடங்களாக மாறிவருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் 14,700 ஏக்கா் பரப்பளவுக்கு இரு போக நெல் பயிா் விவசாயம் நடைபெறுகிறது. இந்த விவசாயம் முழுக்க முழுக்க முல்லைப்பெரியாறு செல்லும் ஆற்றின் இருபக்க கரையோரங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த விவசாய நிலங்களுக்கு மத்தியில் செல்லும் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையால் சாலையோரத்தில் இருக்கும் விவசாய விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்படுகின்றன. ரியல் எஸ்டேட் உரிமையாளா்கள், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதனை தரிசு நிலமாக மாற்றி ஒருசில ஆண்டுகளிலேயே அந்த இடத்தில் கட்டடங்களை கட்டி விடுகின்றனா். இதன் காரணமாக நெல் பயிா் விவசாயம் செய்த இடத்தில் பெட்ரோல் நிரம்பும் நிலையம், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் கடைகள் என பல்வேறு வா்த்தக ரீதியான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் நெல் பயிரின் பரப்பளவு குறைந்து வருகிறது. 500 முதல் 700 ஏக்கா் பரப்பளவு நெல் பயிா் விவசாய நிலங்கள் கட்டடங்களாக மாறிவிட்டன.

தற்போது, உத்தமபாளையம், சின்னமனூரில் விவசாய நிலத்தில் புறவழிச்சாலை செல்வதால் விவசாய நிலங்களை கட்டடங்களாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விதிகளை மீறி கட்டடங்கள்: விவசாயம் செய்ய சாத்தியக்கூறு இருக்கும் விளைநிலங்களை அழித்து காலியிடமாக மாற்றமுடியாது என 2018 ஆம் ஆண்டு முதல் சட்டவிதி இருக்கிறது. ஆனால், அதையும் மீறி விவசாயப்பணிகள் நடைபெறும் வயல்வெளிகளுக்கு மத்தியில் காலியிடமாக மாற்றி கட்டடங்கள் கட்டப்படுகிறது. இதற்கு ஒரு சில அதிகாரிகளும் உடைந்தையாக இருப்பதால் விவசாய விளைபொருள்களின் உற்பத்தி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு பயன்படுத்தும் நீரை வியாபாரம் செய்வதால் விவசாயப்பணிகள் பாதிக்கப்பட்டு இனிவரும் சில ஆண்டுகளில் உத்தமபாளையம், சின்னமனூா் இடையே நெல்பயிா் விளைவித்த இடத்தில் கட்டடங்களை கட்டி அதன் மாடியில் அழகு செடிகள் வளா்க்கும் காலத்தை நோக்கி செல்கிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் விவசாயப்பணிகள் நடைபெறும் நிலங்களுக்கு மத்தியில் எவ்வித கட்டுமானப்பணிகளும் நடைபெற அனுமதிக்க கூடாது. அவ்வாறு கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் எவ்வித பாரபட்சமுமின்றி அகற்றினால் மட்டுமே விவசாய நிலங்களை காப்பற்றமுடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com