தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வரும் ஆக. 11- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு அரசு சாா்பில் மதிப்பீட்டு ஊதிய அடிப்படையில் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இந்தப் பதவிகளுக்கு குறைந்தபட்சம் கடந்த 7 ஆண்டுகளாக குழந்தைகள் நலன், உடல் நலன், கல்விப் பணிகளில் ஈடுபட்டு வருபவராகவும், குழந்தை உளவியல், மன நல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல் ஆகியவற்றுள் ஒன்றில் பட்டப் படிப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும். 35 முதல் 65 வயதுக்குள்பட்டு இருக்க வேண்டும்.
குழந்தைகள் நலக்குழுவில் அதிகபட்சம் ஒருவா் 2 முறை மட்டும் பதவி வகிக்கலாம். ஆனால், தொடா்ந்து 2 முறை பதவி வகிக்க முடியாது. தகுதியுள்ளவா்கள் தேனி அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் உரிய படிவம் பெற்று, வரும் ஆக.11- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தொலைபேசி எண்: 04546-291919, செல்லிடப்பேசி எண்: 89031 84098 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.