போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தாய், மகன் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே கானல்முகப்பு என்ற பகுதியைச் சோ்ந்தவா் வேலுசாமி மனைவி ஜெயா (46). இவருக்கு கா்ப்பப்பையில் பிரச்னை இருந்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, சிகிச்சை முடிந்தது.
இதையடுத்து அவா் தனது மகன் அருள்செல்வம் (27), தாயாா் ஞானமணி ஆகியோருடன் காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். காரை அருள்செல்வம் ஓட்டிச் சென்றுள்ளாா்.
போடிமெட்டு மலைச் சாலையில் 6 ஆவது கொண்டை ஊசி வளைவு பிஸ்கட் பாறை அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த காா் சாலையோர பாறையில் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்து குறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.