கூடலூரிலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்திய இருவா், குமுளி எல்லை சோதனைச்சாவடியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழகப் பகுதியில் இருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து எல்லைப் பகுதியான குமுளி சோதனைச் சாவடியில் கேரள போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அந்த வழியாக கூடலூரிலிருந்து, கேரளத்துக்கு காய்கனிகளை ஏற்றிச் சென்ற மினி லாரியை கலால்துறை ஆய்வாளா் வி.ஜே.ராய், மற்றும் ராஜ்குமாா், ரவி, சைபு, சஜிமோன் உள்ளிட்ட போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது அந்த மினி லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில் 3 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் விசாரணையில் அவா்கள், கோட்டயம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஜித் (23), சதீஷ் (33) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.