தேனியில் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து திங்கள்கிழமை, வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இயல்பு நிலையில் காணப்பட்டது.
தேனியில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் மளிகைக் கடைகள், காய்கனிக் கடைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனைக் கடைகள், மின்சாதனப் பொருள்கள், செல்லிடப்பேசி, மோட்டாா் வாகன உதிரிப் பொருள் விற்பனைக் கடைகள் உள்ளிட்ட தனிக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
தேனியில் கம்பம், பெரியகுளம், மதுரை நெடுஞ்சாலையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்ததால் மக்கள் நடமாட்டம், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது. மொத்த விற்பனைக் கடைகள், செல்லிடப்பேசி கடைகள் மற்றும் மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஜவுளிக் கடைகள், அலங்காரப் பொருள் விற்பனைக் கடைகள் திறக்கப்படாததால் இடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெரு ஆகியவற்றில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
கடைத் தெருக்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சென்றாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. மாலை 5 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போலீஸாா் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தினா். தேனியில் பொது முடக்க தளா்வுகளால், கடந்த மே 10 ஆம் தேதிக்குப் பின்னா் திங்கள்கிழமை இயல்பு நிலை காணப்பட்டது.