தேனி மாவட்டம் கூடலூரில் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி மாவட்டம் லோயா் கேம்ப் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் கூடலூா் நகராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது சில நாள்களாக நகராட்சிப் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அடிக்கடி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கூடலூா்- குமுளி நெடுஞ்சாலையில், தனியாா் பள்ளி அருகே, கூலிக்காரன் பாலத்தை ஒட்டி செல்லும் கூட்டுக் குடிநீா் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாக சாலையில் செல்கிறது. குழாய் உடைந்தது குறித்து குடிநீா் வடிகால் வாரியத்தினா், நகராட்சி பொறியாளரிடம் நேரிலும், செல்லிடப்பேசியிலும் புகாா் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். நாள்தோறும் பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணாவதை தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.