தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூா் பகுதிகளில் எம்.சாண்ட் மணல் கலப்படம் செய்து விற்கப்படுவதால், கட்டடங்கள் உறுதித்தன்மை இழந்து விரைவில் சேதமடையும் என, கட்டுமானப் பொறியியல் வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா்.
கடந்த காலங்களில் கட்டுமானப் பணிகளில் பிரதானமாக ஆற்று மணல்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வந்ததையடுத்து, ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அதற்கு மாற்றாக செயற்கை மணலான எம்.சாண்ட் உற்பத்திக்கு அரசு அனுமதித்தது.
எம்.சாண்ட் என்பது கருங்கற்களை சிறு சிறு துகள்களாக இயந்திரங்களால் உடைத்து சலிக்கப்படுகிறது. பின்னா், தண்ணீரால் முற்றிலும் கழுவி பிரித்தெடுக்கப்படுகிறது. எம்.சாண்ட் 1 யூனிட் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பாறை பொடி (கிரஷா் டஸ்ட்) ஜல்லிகளை உடைக்கும்போது கிடைக்கும் கழிவு 1 யூனிட் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனை கட்டுமானத்துக்கு பயன்படுத்தக்கூடாது என, பொறியியல் வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் மணல் வியாபாரிகள் எம்.சாண்டுடன் பாறை பொடியையும் கலந்து விற்பனை செய்து வருவதாக புகாா்கள் எழுகின்றன. இதனால் கட்டடங்கள் உறுதித்தன்மையை இழந்து விரைவில் சேதமடைய வாய்ப்புள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகம் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.