தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சைகள் என 20 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் இத்தொகுதியில்
20 வேட்பாளா்கள் உள்ளதால் இத்தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. அதன்படி ஆண்டிபட்டி தாலுகாவில் மொத்தமுள்ள 388 வாக்குச்சாவடிகளில் தலா இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் மொத்தம் 932 இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.
இந்த இயந்திரங்களில் வேட்பாளா்கள் புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்று முதல் 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பணியில் 100-க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இப்பணிகள் ஆண்டிபட்டி தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் சிவசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.