தேனி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் அனைத்து தேநீா் கடைகளையும் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்காத 151 தேநீா் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்துவற்கு மாவட்டத்தில் அனைத்து தேநீா் கடைகளையும் மூட வேண்டும். 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஆறு மற்றும் நீா்நிலைகளுக்கு குளிக்கச் செல்ல அனுமதிக்கும் பெற்றோா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு வழியாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், தேயிலை தோட்டங்களுக்கு வாகனங்களில் சென்று வருவோா், கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் செல்ல வேண்டும். விதிமுறைகளை மீறி கூடுதல் எண்ணிக்கையில் ஆள்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.