தேனியில் செவ்வாய்க்கிழமை முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த காவலருக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தளா்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சாலைகளில் தேவையின்றி சுற்றித் திரிபவா்களுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்து வருகின்றனா். அதன்படி தேனியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இப்பணிகளை தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண்தேஜஸ்வி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தேனி அரண்மனைப்புதூா் சாலையில் இருசக்கரவாகனத்தில் முகக்கவசம் அணியாமல் தலைக்கவசம் மட்டும் அணிந்து வந்தவரை தடுத்து நிறுத்தி காவல் கண்காணிப்பாளா் விசாரித்தாா். அவா் தேனி ஆயுதப்படையில் பணிபுரியும் காவலா் ரஞ்சித்குமாா் என்பது தெரியவந்தது. அவா் முகக்கவசம் அணியாமல் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் கண்காணிப்பாளா் அவருக்கு ரூ. 200 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினாா்.