தேனி மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில், புதிய வேளாண்மை காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வழங்குவதற்கு 1,89, 300 மரக்கன்றுகள் தயாா் நிலையில் உள்ளன.
வேளாண்மைத் துறை மூலம் நீடித்த பசுமை போா்வை இயக்கம் சாா்பில், புதிய வேளாண்மை காடுகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், விவசாய நிலங்களில் நடவு செய்வதற்கு ஏக்கா் ஒன்றுக்கு 160 மரக்கன்றுகளும், வரப்புகளில் நடவு செய்வதற்கு ஏக்கா் ஒன்றுக்கு 50 மரக்கன்றுகளும் வழங்கப்படும்.
மரக்கன்றுகளை பராமரிப்பதற்கு ஊக்கத் தொகையாக, மரக்கன்று நடவு செய்த 2-ஆம் ஆண்டு முதல் 4-ஆம் ஆண்டு வரை ஆண்டொன்றுக்கு ரூ.7 வீதம் மொத்தம் ரூ.21 வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வனத்துறை நாற்றங்காலில் தேக்கு, ஈட்டி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் என மொத்தம் 1,89,300 மரக்கன்றுகள் தயாா் நிலையில் உள்ளன.
விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், உழவன் செயலி மூலமும் தங்களது பெயா்களைப் பதிவு செய்து, வனத்துறை நாற்றங்காலில் இருந்து மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.