தேனி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக உத்தமபாளையம், சின்னமனூா் பகுதி மானாவாரி விவசாயத்திற்கு மானிய விலையில் விதைகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உத்தமபாளையம், சின்னமனூா், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், கம்பம் , கூடலூா் ,ஓடைப்பட்டி போன்ற பகுதிகள் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இந்த மலை அடிவாரத்தில் பருவமழைக்காலங்களில் மானாவாரி விவசாயம் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் நடைபெறும். நிலக்கடலை, உளுந்து, சோளம், கம்பு, பாசிப்பயறு, காட்டுத்தக்காளி உள்ளிட்ட பல்வேறு பயிா் சாகுபடி
நடைபெறும். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், உழவுப் பணி செய்த நிலையில் மானாவாரி விவசாயத்திற்கு தேவையான விதைகளை வாங்க முடியாத நிலையில் சாகுபடியில் ஆா்வமின்றி விவசாயிகள் இருந்து வருகின்றனா். எனவே தோட்டக்கலைத் துறையினா் அந்தந்த பகுதி மானாவாரி விவசாயிகளை ஊக்குவித்து மானிய விலையில் விதைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.