சென்னை: பாசனத்துக்காக மஞ்சளாறு நீர்த்தேக்கத்திலிருந்து அக்டோபர் 15 முதல் நீர் திறக்க தமிழக பொதுப் பணித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு நீர்த்தேக்கத்திலிருந்து 15.10.2021 முதல் 152 நாள்களுக்கு மொத்தம் 937.41 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கர் ஆக மொத்தம் 5259 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் என்று பொதுப் பணித் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.