தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தொடர்மழை காரணமாக திராட்சை விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. நேரடியாக, மறைமுகமாக பல ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடர்மழை காரணமாக திராட்சை பழங்கள் விலை குறைந்துள்ளன, காரணம், மழைக் காலங்களில் திராட்சை நுகர்வு குறைவாகும். இதனால் திராட்சைத் தோட்டங்களில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு எடுத்து, சந்தைகளுக்கு அனுப்புகின்றனர். கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு கிடைத்தால்தான் சாகுபடியாளர்களுக்கு போதுமான லாபம் கிடைக்கும்.
மேலும் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்தால் இன்னும் விலை குறைய வாய்ப்பிருப்பதால், திராட்சை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தீபாவளி பரிசாக திராட்சை விவசாயிகளிடம் அரசு ஊழியர்கள் திராட்சை வாங்க தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினால் திராட்சை விவசாயிகளுக்கு உற்பத்தி செலவாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.