கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் அடுத்தடுத்து உள்ள கடைகளில் பூட்டை உடைத்து திருடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் பிரதான சாலையில் ஆயத்த ஆடை கடை, உரக்கடை, மின்சாதன பொருட்கள் விற்கும் கடை, செல்போன் கடை உள்ளிட்ட கடைகள் உள்ளன.
சனிக்கிழமை காலை கடையை திறக்க வந்த கடைகளின் உரிமையாளர்கள் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ரொக்கப் பணம், செல்லிடப்பேசி, ஆயத்த ஆடைகள், உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இதுபற்றி கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் ஏ. எஸ். பி. ஸ்ரேயா குப்தா தலைமையில் காவலர்கள் பூட்டு உடைக்கப்பட்ட கடைகளை ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
பூட்டு உடைக்கப்பட்ட கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபடவில்லை. எதிர்புறம் உள்ள கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராக்களில் உள்ள பதிவுகளை காவலர்கள் பார்த்து வருகின்றனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே கடைகளின் பூட்டை உடைத்து திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் தொடர்ந்து நான்கு கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு திருடு போனது சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பாக உள்ளது.