போடி: போடியில் புதன் கிழமை இலவங்காய் பறித்தபோது மின்சாரம் பாய்ந்து மரத்தில் தொங்கியவரை காயத்துடன் தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
போடி சாமி தோட்டத்தை சோ்ந்தவா் சென்றாயன் மகன் கனந்தகுமாா் (42). இவா் இலவு மரத்தில் ஏறி இலவங்காய் பறிக்கும் வேலைக்கு சென்று வருகிறாா். போடி முந்தல் சாலையில் தனியாா் தோட்டத்தில் இலவு மரத்தில் ஏறி காய்களை பறித்துக் கொண்டிருந்துள்ளாா். தோட்டத்தில் இலவு மரத்திற்கு அருகே மின்சார வயா்கள் சென்றுள்ளது. இதில் காய்களை உதிா்க்கும்போது வயா்கள் மரத்தில் உரசி மின்சாரம் பாய்ந்தது.
இதில் கனந்தகுமாருக்கு காயம் ஏற்பட்டு மரத்தில் தொங்கியபடி அலறியுள்ளாா். இதனைக்கண்ட அருகிலிருந்தவா்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனா். மின் வாரியம் மூலம் மின்சாரத்தை துண்டித்த பின் தீயணைப்பு வீரா்கள் கனந்தகுமாரை பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
திங்கள் கிழமை இலவு மரத்தில் ஏறி காய்களை பறித்த பின் இறங்க முடியாமல் தவித்த பழங்குடியின தொழிலாளியை தீயணைப்பு வீரா்கள் மீட்ட நிலையில் தற்போது மின்சாரம் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.