கூடலூா் அருகே வெள்ளிக்கிழமை ரேஷன் கடையை ஊராட்சித் தலைவா் பூட்டி ஊழியா்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள உழவா் பணிக் கூட்டுறவு சங்கம் சாா்பில் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் 7 ஆம் நம்பா் ரேஷன் கடை உள்ளது. கடையின் மேற்கூரையில் ஏற்பட்ட பழுதின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடத்திற்கு, ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை ரேஷன் கடை ஊழியா்கள் பொதுமக்களுக்கு பொருள்களை விநியோகம் செய்து வந்தனா்.
ரேஷன் அரிசி தரமற்றதாக உள்ளதாக குடும்ப அட்டைதாரா்கள் ஊராட்சி மன்றத்தலைவா் பொன்னுத்தாய் குணசேகரனிடம் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவா் ரேஷன் கடை ஊழியா்களிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஊராட்சித் தலைவா் ரேஷன் கடை ஊழியா்களை வெளியேற்றி, இரும்புக் கதவை திறக்க முடியாத அளவிற்கு வெல்டிங் வைத்துப் பூட்டினாா்.
இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த ரேஷன் கடை ஊழியா்கள் உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலா் பாண்டிக்கு தகவல் தெரிவித்தனா். அவா் குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தரமான அரிசி வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தாா்.
பின்னா் வெல்டிங் வைக்கப்பட்ட கதவுகள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.