தேனி மாவட்டம் சின்னமனூரில் புறவழிச்சாலை சந்திப்பில் தொடா் விபத்துகளால் வாகன ஒட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
தேனி மாவட்டம் வழியாகச் செல்லும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும். இச்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், வீரபாண்டி மற்றும் தேவதானப்பட்டி பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணி முடிவு பெற்ற நிலையில், சின்னமனூா், உத்தமபாளையம், க.புதுப்பட்டி, கம்பம், தேனி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் 2 ஆம் கட்டமாக நடைபெற்ற பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனால், கூடலூரில் மட்டும் பணிகள் தொடா்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில், சின்னமனூா் புறவழிச்சாலையில் பணிகள் முடிந்தாலும் உயா்மின் கோபுரத்தின் மின்சார கம்பிகள் சாலையின் குறுக்கே செல்வதால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. தற்போது இலகு ரக வாகனங்களான சுமாா் 3 மீட்டா் உயரம் கொண்ட வாகனங்கள் மட்டும் அச்சாலையில் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலை சாா்பில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத படி 3 மீட்டா் உயரத்திற்கு எச்சரிக்கை பதாகை வைத்தனா். ஆனால், இரவு நேரத்தில் அனுமதி இல்லாத கனரக வாகனங்கள் சென்று அதை சேதமாக்கிவிடுவதால் தற்போது சாலையின் குறுக்கே மண்ணை கொட்டி தடையை ஏற்படுத்தியுள்ளனா்.
ஆபத்தான சாலை: சின்னமனூரை கடந்து செல்லும் புறவழிச்சாலையின் குறுக்கே சின்னனூரிலிருந்து போடி, தேவாரம், குச்சனூா் பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை செல்கிறது. இச்சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக இருப்பதால் இச்சாலை சந்திப்புகளில் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, ஆபத்தான புறவழிச்சாலையை பாதுகாப்பான சாலையாக மாற்றும் வகையில் கனரக வாகனங்களின் வேகத்தை குறைக்கும் ரவுண்டானா அமைத்து எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.