கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கு விநாடிக்கு, 1,678 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மின்சார உற்பத்தியும் 151 மெகாவாட்டாக உயர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, தேக்கடி, பெரியாறு அணை ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. பெரியாறு அணையில் 22.0 மில்லிமீட்டர் மழையளவும், தேக்கடி ஏரியில் 17.4 மழையும் பெய்தது.
திங்கள்கிழமை நிலவரப்படி பெரியாறு அணையில் நீர்மட்டம் 127.70 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 142 அடி), நீர் இருப்பு 4,201 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 1,457 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,678 கன அடியாகவும் இருந்தது.
மின்சார உற்பத்தி அதிகரிப்பு
தமிழக பகுதிக்கு தண்ணீர் அதிகம் திறக்கப்படுவதால், லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு மின்னாக்கிகளும் திங்கள்கிழமை முதல் இயக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம், 151 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நான்கு அலகுகளிலும் தலா , - 40, 40, 36, 35 என உற்பத்தி நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி திறந்து விடப்பட்டதன் மூலம் லோயர் கேம்ப்பில், 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது, திங்கள்கிழமை நீர் திறப்பு அதிகரித்ததால், மின் உற்பத்தி, 151 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்படுகிறது.