கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் தொடர் மழை பெய்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, திங்கள்கிழமையும் தொடர்கிறது. இதனால் இரண்டாவது நாளாக குளிக்க புலிகள் காப்பகத்தினர் தடை விதித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தைப்பாறையில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகம் ஏற்பட்டதால், சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, திங்கள்கிழமையிலும் தொடர்கிறது.
இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க இரண்டாவது நாளாக ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் தடை விதித்துள்ளனர். அருவி பகுதிக்கு பொதுமக்கள் செல்லாதவாறு, ஊழியர்கள் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.