மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் ஊராட்சிகளில் தொடா் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, நலத்திட்டங்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன் பாா்வையிட்டு, குறைகளை கேட்டறிந்து 87 பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி அவா் பேசியது: மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் ஊராட்சிகளில் தொடா் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, நலத்திட்டங்கள், தேவையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுயதொழில் தொடங்க அரசு மானியத்துடன் கடனுதவி, அனைத்துவிதமான வாகனங்கள் வழங்கப்படுகிறது. அனைத்துத்துறை மருத்துவா்களும் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்கின்றனா். வரும் ஜூன் 7 ஆம் தேதி அரண்மனைப்புதூா் ஊராட்சியில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், பூமலைக்குண்டு ஊராட்சியில் 2 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க. சகுந்தலா, ஊராட்சி தலைவா் பொன்னுத்தாய் குணசேகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.