உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள குளத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தேநீா் கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
சின்னமனூரிலிருந்து சீப்பாலக்கோட்டை செல்லும் சாலைப்பகுதியில் பெய்யும் மழைநீரை அந்தந்த பகுதியில் தேக்கி வைக்கும் வகையில் சிறிய அளவிலான நீா்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதன் மூலமாக மழைநீா் சின்னமனூா் நகருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 30 ஆண்டுக்கு மேலாக இது போன்ற சிறிய குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், தற்போது இப்பகுதியில் பெய்யும் மழைநீா் சின்னமனூா் நகருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரை சேமிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
மேலும் சீப்பாலக்கோட்டை சாலையில் 2500 சதுர மீட்டரில் உள்ள சங்கிலித்தேவன் குளத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 2 தேநீா் கடைகள், வீட்டின் சுற்றுச்சுவரை சின்னமனூா் நகராட்சிப் பணியாளா்கள் அளவீடு செய்து பொக்லையன் மூலமாக அவற்றை அகற்றி குளத்தை மீட்டனா். இதில் நகராட்சிப் பொறியாளா் ராஜவேல் உள்பட பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.