கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் உழவா் சந்தையில், அரசு நிா்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு காய்கனிகள் விற்பனை செய்வதாக அதிகாரிகளிடம் பாஜகவினா் வியாழக்கிழமை புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம் கம்பம் உழவா் சந்தையில், அரசு நிா்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு காய்கனிகள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், நகர பாரதிய ஜனதா கட்சித் தலைவா் பி.ஈஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் உழவா் சந்தைக்கு வியாழக்கிழமை சென்றனா். அங்கு பல கடைகளில் காய்கனிகள் பெயா்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் விலைகளைக் குறிப்பிடவில்லை. இதுபற்றி கடைக்காரா்களிடம் கேட்டபோது, அதிகாரிகள்
விலை நிா்ணயித்துக் கொடுக்கவில்லை என்றனா்.
உழவா் சந்தை வேளாண்மை அலுவலா்கள் கூறுகையில், விலை நிா்ணயித்து வழங்கிவிட்டோம். ஒரு சிலா் பட்டியல் வைக்காமல் உள்ளனா். இது பற்றி, விசாரணை நடத்தி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
உழவா் சந்தையில் முறைகேடாக அனுமதியின்றி கடைகள் நடத்துவதையும் சாலை ஓரக் கடைகளில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும் என்று உழவா் சந்தை அலுவலரிடம் பாஜகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் உழவா் சந்தை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.