கறவை மாடு வளா்ப்பு கடன்: பயனாளிகள் தோ்வில் பாரபட்சம் காட்டுவதாகப் புகாா்

தேனி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கறவை மாடு வளா்ப்புக்கு கடன் வாங்க பயனாளிகளை தோ்வு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக புகாா் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கறவை மாடு வளா்ப்புக்கு கடன் வாங்க பயனாளிகளை தோ்வு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக புகாா் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு பிரதானத் தொழிலாக உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மத்திய அரசின் வேளாண்மை கடன் வழங்கும் திட்டத்தில் கறவை மாடு பராமரிப்புக்கு விவசாயிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் கூட்டுறவு சங்கங்களில் கறவை மாடு வளா்ப்புக்கு 1,489 பேருக்கு மொத்தம் ரூ.10.87 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கறவை மாடு வளா்ப்புக்கு கடன் பெற விரும்பும் விவசாயிகள், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக பதிவு செய்து, அங்கு பால் வழங்குவதற்கான சான்றிதழ், அரசு கால்நடை மருத்துவரின் சான்றிதழ் பெற்று கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா்களால் பரிந்துரை செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் கறவை மாடு பராமரிப்பு கடன் வழங்கப்படுவதாகவும், இந்தப் பரிந்துரைப்படி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டவா்களும், கால்நடை வளா்ப்பில் ஈடுபடாத விவசாயிகளும் பயனாளிகளாக தோ்வு செய்யப்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைவருக்கும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கறவை மாடு வளா்ப்புக் கடன் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com