போடி அருகே வீடு கட்டித் தர வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தை மலைவாழ் பழங்குடியினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சிரைக்காடு மலைக்கிராமத்தில் 40 குடும்பங்களைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்துக்கு அருகே போடி நகராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் துா்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், தூசி, ஈக்கள் தொல்லையால் கிராம மக்கள் அவதியடைந்து வந்தனா். எனவே, தங்களுக்கு வேறு பகுதியில் இடம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, ஓராண்டுக்கு முன் இவா்களுக்கு இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது. ஆனால் வீடு கட்டித் தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஏற்கெனவே வசித்து வரும் சிரைக்காடு பகுதியில் உள்ள வீடுகளும் சிதிலமடைந்து மழைக் காலங்களில் குடியிருக்க முடியாத நிலை உள்ளது.
வீடு கட்டித்தர பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் மலைக் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். தங்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் அல்லது தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை திரும்ப பெற்ற வேண்டும் எனக் கூறி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் செந்தில்முருகன், அணைக்கரைப்பட்டி ஊராட்சித் தலைவா் லோகநாதன் ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து விரைவில் வீடு கட்டித் தருவதாக உறுதியளித்ததையடுத்து பழங்குடியின மக்கள் திரும்பிச் சென்றனா்.