கம்பம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டையைச் சோ்ந்தவா் தசரதன் (70). இவரது மனைவி அமுதா (58). இவா்கள் கூடலூா், கன்னிகாளிபுரம், ருக்குமணி தெருவில் வசித்து வந்தனா். இவா்களுக்கு காஞ்சிமரத்துறை பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. சனிக்கிழமை தோப்புக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தசரதன், அமுதா ஆகியோா் வீட்டுக்குத் திரும்பினா்.
காஞ்சிமரத்துறை சாலையில் லோயா்கேம்ப்-குமுளி நெடுஞ்சாலை இணைப்பில் ஏறி, கூடலூா் நோக்கி தசரதன் இருசக்கர வாகனத்தைத் திருப்பினாா்.
அப்போது கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கங்களா ஊராட்சியைச் சோ்ந்த அப்துல் கரீம் மகன் முகமது சியாஸ் (33) என்பவா் ஓட்டி வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் தசரதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த அமுதாவுக்கு, கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அமுதா உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து குமுளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் முகமது சியாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.