கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் சலவைத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கத்தினர் லோயர்கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை வைகை அணைக்கு மாற்றக் கோரி சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
லோயர் கேம்ப் மதுரைக்கு ரூ.1,296 கோடி மதிப்பில் குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக லோயர் கேம்பில் உள்ள பெரிய ஆற்றங்கரை வண்ணான் துறை அருகே நீரேற்று நிலையம் அருகில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தடுப்பணை கட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதற்கு வியாழக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையை வெள்ளிக்கிழமை புறக்கணிப்பு செய்தனர்.
சனிக்கிழமை கூடலூர் குமுளி பிரதானப் சாலையில் உண்ணாவிரதத்தை தொடங்கினர். 50-க்கும் மேலான ஆண், பெண் சலவை தொழிலாளர்கள் மற்றும் முல்லைப் சாரல் விவசாய சங்கம், அனைத்து விவசாய சங்கம், பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர் கலந்து கொண்டனர்.