தேனி அல்லிநகரத்தில் வழக்குப் பதிவு செய்வதற்காக காவலா்கள் கஞ்சா வாங்கி பதுக்கி வைத்திருந்த விவாகரத்தில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை தொடா்பாக வழக்குப் பதிவு செய்வதற்கு ஓன்றரை கிலோ கஞ்சா வாங்கி, காவலா் ஒருவா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில், அல்லிநகரம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஸ்கண்ணன், காவலா்கள் ராஜா, வாலிராஜன், ஸ்ரீதா் ஆகிய 4 போ் தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த அல்லிநகரம் காவல் நிலைய காவலா் ராஜாவை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டாா். இதனிடையே, காவலா்களுக்கு கஞ்சா வழங்கியதாக சக்கரைப்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் என்பவரை அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்துள்ளனா்.