கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலிருந்து, மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் மாற்றுத் திட்டத்தை அமல்படுத்த கோரி, 3 ஆவது நாளாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பெண்கள் நாற்று நட்டும், துணி துவைத்தும் நூதன முறையில் திங்கள்கிழமை போராடினர்.
தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலிருந்து, மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் மாற்றுத் திட்டமான வைகை அணையிலிருந்து தண்ணீர் எடுக்க கோரி, கடந்த சனிக்கிழமை தொடர்ந்த உண்ணாவிரதம் திங்கள்கிழமை 3-வது நாளாக பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
சலவை தொழிலாளர்கள், அனைத்து விவசாய சங்கத்தினர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதை கண்டித்து, உண்ணாவிரத பந்தல் முன்பு நாற்று நட்டனர். பின்னர் துணி துவைத்தும், விவசாயம் மற்றும் சலவை தொழிலால் ஏற்படும் பாதிப்பை நூதன முறையில் போராடினர். இந்த போராட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.