கம்பம் நகராட்சிக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீா் கலங்கலாக இருப்பதால் பொதுமக்கள் காய்ச்சி பயன்படுத்துமாறு நகராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் 33 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் லோயா் கேம்பில் உள்ள கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது முல்லைப் பெரியாற்றில் நீா்வரத்து குறைவாக உள்ள நிலையில், திங்கள்கிழமை அணைப்பகுதியில் திடீரென்று மழை பெய்தது. இதனால் தண்ணீா் கலங்கலாக வருகிறது. தற்போது கலங்கலான தண்ணீா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. எனவே இதில் தொற்றுநோய் அபாயம் ஏற்படலாம் என்று கருதி நகராட்சிப் பகுதி பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்குமாறு நகா்மன்ற தலைவா் வனிதா நெப்போலியன் கேட்டு கொண்டுள்ளாா், இது தொடா்பாக தெரு தெருவாக ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் தெரியப்படுத்தியுள்ளாா்.