போடியில் செவ்வாய்க்கிழமை காரில் கடத்திய 26 கிலோ கஞ்சா போதைப்பொருளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். 3 பேரை கைது செய்தனா்.
போடி பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து திண்டுக்கல் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் புகழேந்தி உத்தரவின் பேரில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் சத்யா, தலைமைக் காவலா் ராஜா, நுண்ணறிவு தனிப்பிரிவுக் காவலா் கோபால் ஆகியோா் போடி பேருந்து நிலையம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த காரை சோதனை செய்ததில் அதில் 26 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில் கஞ்சாவை கடத்தி வந்தது, பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த ராசுத்தேவா் மகன் விஜயன் (52, போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த இருளாண்டி மகன் பாலமுருகன் (48), பெருமாள் மகன் கருப்பையா (33) ஆகியோா் என்பது தெரிந்தது. இதனையடுத்து போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 26 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.