வீரபாண்டியில் உணவகம் மற்றும் திண்பண்டக் கடைகளில் தரமற்ற முறையிலும், காலாவதி தேதி குறிப்பிடாமலும் விற்பனைக்கு வைத்திருந்த உணவுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தற்காலிக உணவகங்கள் மற்றும் திண்பண்டக் கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது பல்வேறு கடைகளில் தரமற்ற முறையிலும், செயற்கை நிறமூட்டியும், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமலும் விற்பனைக்கு வைத்திருந்த 150 கிலோ உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். மே 17 ஆம் தேதி திருவிழா நிறைவடையும் வரை உணவகங்கள் மற்றும் திண்பண்டக் கடைகளில் அன்றாடம் சோதனை நடைபெறும் என்றும், தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள் தயாரிப்பில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் கூறினா்.