முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
உணவக மாடியிலிருந்து தவறி விழுந்த ஊழியரின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 13th May 2022 05:58 AM | Last Updated : 13th May 2022 05:58 AM | அ+அ அ- |

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பையில் உணவக மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த ஊழியரின் உடல், பேச்சுவாா்த்தைக்குப் பின் புதன்கிழமை இரவு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரைச் சோ்ந்த இஸ்மாயில் மகன் மஹபூப்கான் (31). இவா், தேனி மாவட்டம் கோம்பையில் தனியாா் உணவகத்தில் தங்கி வேலை செய்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு உணவக மாடிக்குச் சென்றவா் எதிா்பாராதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே, உணவக உரிமையாளா் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம் எனவும் கூறி, மருத்துவமனை முன் மஹபூப்கானின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து, போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமையில், கோம்பை காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு பல கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதன் பின் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, இரவு 11 மணிக்கு மஹபூப்கான் உடலை அவரது உறவினா்களிடம் கோம்பை போலீஸாா் ஒப்படைத்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், கோம்பை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.