தேனி மாவட்டம் வைகை அணை அருகே வியாழக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயத் தொழிலாளி போக்குவரத்து தடுப்புச் சுவற்றில் மோதி உயிரிழந்தாா்.
எஸ்.எஸ்.புரத்தைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் செந்தில் (38). இவரது உறவினா் பெத்தன் மகன் வேலுசாமி(35). இவா்கள் இருவரும் நரசிங்காபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, வைகை அணை அருகே ஆண்டிபட்டி-ஜம்புலிபுத்தூா் இடையே சாலையின் மையப் பகுதியில் உள்ள போக்குவரத்து தடுப்புச் சுவா் மீது இவா்களது இருசக்கர வாகனம் மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலுசாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.