தேனியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அரசு முதன்மைச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அ. காா்த்திக் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆண்டிபட்டி அரசு கால்நடை மருத்துவமனை, மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணி, திடக் கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள், ரூ.11 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாகம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் சில்வாா்பட்டி சமத்துவபுரத்தில் வீடுகள், அங்கன்வாடி மையம், மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி புனரமைப்புப் பணிகள், சிமென்ட் சாலை அமைக்கும் பணி, மஞ்சளாறு அணை மீன் பண்ணையில் உள்ள மீன் குஞ்சு பொரிப்பகத்தின் செயல்பாடு ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன், மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சுப்பையா பாண்டியன், மீன் வளத் துறை உதவி இயக்குநா் பஞ்சராஜா, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ராஜாராம் ஆகியோா் உடனிருந்தனா்.