பலத்த மழை காரணமாக ஹைவேவிஸ் - மேகமலை நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன.
தேனி மாவட்டத்தில் மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் ஹைவேவிஸ் பேருராட்சி உள்ளது. இங்கு 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்குச் செல்வதற்கு சின்னமனூரிலிருந்து இரவங்கலாா் வரை 52 கிலோ மீட்டா் தொலைவுக்கு நெடுஞ்சாலை உள்ளது. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தததால் திடீரென அருவிகள் உருவாகின. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அடுக்கம்பாறை மலைச்சாலையில் 10, 11 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறையினா் ராட்ச பாறைகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றி போக்குவரத்தை சரி செய்தனா். இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினா் கூறுகையில், தற்காலிக நடவடிக்கையாக போக்குவரத்து தடையின்றி செல்ல பாறைகள் சாலையோரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. வரும் நாள்களில் பாறை உடைத்து அகற்றப்படும். வெடி வைக்க அனுமதியில்லை என்றனா்.