தேனி மாவட்டம் கம்பத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி 3 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியக் கட்டடம் கடந்த 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேலானதால், சுமாா் ரூ. 3.50 கோடி செலவில் புதிய அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பழைய அலுவலகக் கட்டடத்தை அகற்ற கடந்த ஆக.17 இல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால் அப்போது ஒப்பந்தப்புள்ளி கோரும் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் இந்தக் கூட்டம் ஆக. 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினமும் ஒரு சில காரணங்களால் ஒப்பந்தப்புள்ளி கோரும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமையும் பதிவு பெற்ற ஒப்பந்ததாரா்கள், இந்த ஒப்பந்தப்புள்ளி தங்களுக்கு வழங்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் மீண்டும் தேதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் கூறியது: இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றாா்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒப்பந்ததாரா் ஒருவா் கூறியது: குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஒப்பந்தம் வழங்கப் போவதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து அதிகாரிகளுடன் விளக்கம் கேட்டோம். அதனால் அதிகாரிகள் மீண்டும் ஒத்திவைத்துள்ளனா் என்றாா்.