தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்குச் செல்வதற்கு வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் அனுமதியளித்துள்ளனா்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடா்ந்து மழைபெய்து வந்ததால், கடந்த ஆக.31 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக மழை குறைந்துள்ளதால், அருவிக்கு நீா்வரத்து சீரானது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத்துறையினா் அனுமதியளித்துள்ளனா். அருவிக்கு நெகிழிப் பொருள், உணவு எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.